Thursday, September 6, 2012

தாக்குதல் மீதான தாக்குதல்: அதீத எதிர்வினையின் அரசியல்

இலங்கையில் நடந்தது மனிதகுலத்துக்கு எதிரான மிகப்பெரிய பயங்கரம். உலக வரலாற்றில் நடந்த இன ஒழிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்று. அதற்கு எதிர்வினையாக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் மிகச் சாதாரணமானவை. ஆனால், அவை இரண்டுவிதமான போக்குகளுக்கு இட்டுச் செல்கின்றன.

ஒருபுறம் நடந்த பயங்கரத்துக்கு நீதி கோருவது மற்றும் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கு வழிகோலுவது என்ற நோக்கத்தோடு செயல்படும் போக்கு. மறுபுறம், அதை வைத்து தமிழக அரசியலில் பாசிசப் போக்குகளை உருவாக்குவது, முதிர்ச்சியற்ற உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, குறுகிய கட்சி அரசியல் கணக்குகளை நோக்கமாகக் கொள்வது என்று செயல்படும் போக்கு. இரண்டாவதாக சொல்லப்பட்ட வழிகளில் அரசியல் நடத்துக்கும் குழுக்கள், கட்சிகளால் ஈழத் தமிழர்களுக்கு நன்மையோ இல்லையோ ஆனால் தமிழக அரசியலை மூர்க்கத்தை நோக்கி அழிவை நோக்கி அவை இட்டுச் செல்லும் என்பது நிச்சயம். இலங்கையர்கள் மீதான தாக்குதல்கள் நிச்சயம் இரண்டாவது போக்கின்பாற்பட்டவையே. இதை ஏற்பது நிச்சயம் தமிழக அரசியலை வன்முறைப்படுத்திவிடும். எனினும், இதை எதிர்க்கும் வேலைக்கு நாம் கச்சை கட்டத்தேவையில்லை. அரசு இதை அனுமதிக்காது. அரசே இதை எதிர்கொள்ளும்.

  ஆனால், போர் நடந்துகொண்டிருந்தபோதும், அதற்குப் பிறகும் நடந்த வரலாற்றில் பெரிய பயங்கரம் குறித்தோ, படுகொலைகள் குறித்தோ, முள்வேலி முகாம்கள் குறித்தோ எப்போதும் அமைதி காத்தே வந்துள்ள தமிழக அறிவு ஜீவிகள், மனித உரிமையாளர்களுக்கு இந்தப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சத்திய ஆவேசம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  இத்தனைக்கும், அரசாங்கமே எதிர்கொண்டுவிடும் தன்மையுள்ள இலங்கையர் மீதான தாக்குதலை இவர்கள் மூச்சுப் பிடித்துக்கொண்டு கண்டிக்கிறார்கள், கண்டிக்காதவர்களையும் கண்டிக்கிறார்கள்.

   வழக்கமாக நடக்கும் குற்றச் செயல்களுக்கு மனித உரிமையாளர்கள் எதிர்வினையாற்றுவதில்லை. அதை போலீஸ் பார்த்துக்கொள்ளும் என்பதும், எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் ஆற்றல் மனித உரிமையாளர்களுக்கு இல்லை என்பதுமே காரணம். அரசே, போலீசே ஒரு கட்சியாக நின்று நடத்தும் வன்முறைகளுக்குத்தான் மனித உரிமையாளர்களின் எதிர்வினை தேவைப்படும். ஆனால், அரசே முன்னின்று நடத்திய ஈழப் படுகொலைகளை, தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுவதை தாக்கப்படுவதை எவ்வித சலனமுமற்று பார்த்துக்கொண்டிருந்த, பார்க்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள், போலீஸ் மூலம் எதிர்கொள்ளத் தகுந்த சாதாரண வன்செயல்களுக்கு ஆற்றும் எதிர்வினை இவர்களது பெருமைக்கு உகந்ததாக இல்லை. உள்நாட்டில் இவர்கள் மேற்கொள்ளும் மனித உரிமை செயற்பாடுகள் மதிப்புக்குரியவையாக இருந்தபோதிலும், இத்தகைய வழுவல்கள் நிச்சயம் ஏமாற்றத்தையே அளிக்கின்றன.

   அம்னஸ்டி இன்டர்நேஷனல், இந்த இலங்கையர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேள்வி கேட்டு பதில் கோரி எஸ்.எம்.எஸ். பிரசாரம் மேற்கொள்கிறது. மிகப்பெரிய இனவழிப்பு நடவடிக்கையையும், சின்னஞ்சிறிய வன்முறைத் தாக்குதலையும் ஒன்றுபோல பாவித்து எதிர்வினையாற்றுவதைப் பார்க்கையில் இது அதீத எதிர்வினையாக, ஓவர் ரியாக்ஷனாகவே படுகிறது. இந்த ஓவர் ரியாக்ஷனின் அரசியல் என்ன? 

No comments:

Post a Comment