Tuesday, July 17, 2012

டெசோ: கருணாநிதி அடித்த கரணமும் காரணமும்






தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் மாநாட்டில் ஈழம் கோரித் தீர்மானம் போடமாட்டோம் என்று அறிவித்துள்ளார் அந்த அமைப்பின் தலைவர் கருணாநிதி. ஒரு மாநாட்டில் என்ன தீர்மானம் போடுவோம் அல்லது போடமாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிவித்துவி்ட்டால், அந்த மாநாட்டில் நடக்கப்போகும் விவாதங்களுக்கும், தீர்மானங்களின் மீது வாக்களிப்பதற்கும் என்ன பொருள்? பேசாமல் "தமிழீழம் கோரி தீர்மானம் போடுவதில்லை" என்பதே எங்கள் முதல் தீர்மானம் என்றுகூட அவர் அறிவித்திருக்கலாம்.

கருணாநிதியின் இந்த அறிவிப்பைவிட பெரிய குட்டிக்கரணமோ, நகைச்சுவையோ இந்த நூற்றாண்டில் இருக்கப் போவதில்லை. இதற்குப் பின்னால் சிதம்பரத்தின் சந்திப்பு துருத்திக்கொண்டு தெரிகிறது. கிடக்கட்டும்.

ஆனால், இந்தக் கூத்தின் பின்னணியில் ஒன்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழீழமே தீர்வு என்றும் டெசோவை உயிர்ப்பிக்கப் போவதாகவும் கருணாநிதி கூறியபோது அதைக் கண்டு கொந்தளித்தவர்கள் தமிழீழத்தை எதிர்க்கும் காங்கிரஸோ, பாஜகவோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அல்ல. தமிழீழக் கோரிக்கைக்கான ஒட்டுமொத்த தமிழக ஏஜெண்டுகளா தங்களை நியமித்துக்கொண்ட சீமான், நெடுமாறன் வகையறாக்களே. கேலி செய்தார்கள்; கிண்டலடித்தார்கள்; கண்டித்தார்கள். கருணாநிதி அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் வருணித்தார்கள். இதில் பெரும் கூத்து என்னவென்றால், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு திடீர் ஈழ ஆதரவாளரான ஜெயலலிதாவை "ஈழத்தாய்" என்று வருணித்ததே இந்த கோஷ்டிதான். ஈழ ஆதரவு எங்கிருந்து வந்தாலும், எந்த சூழலில் வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்கிற தந்திரமே இதற்குக் காரணம் என்றால், கருணாநிதியின் ஆதரவைக் கண்டு மட்டும் இவர்கள் கொந்தளிக்கக் காரணம் என்ன?


இன்னொரு புறம், டெசோவை உயிர்ப்பிக்கும் கருணாநிதியின் முடிவு, புலம் பெயர்ந்தவர்களும், உள்ளூர் இணையப் புரட்சியாளர்களும் இணைய வெளிகளில் கருணாநிதி மீது அநாகரிக வசைகளை அள்ளித் தெளிப்பதற்கான இன்னொரு சந்தர்ப்பமாக ஆகியிருந்தது. இவர்கள் எல்லோரது வசைகளின், விமர்சனங்களின் ஒட்டுமொத்தம் சாரம் இதுதான் "இந்த டெசோவால் ஒன்றும் ஆகாது. கருணாநிதி அரசியல் செய்கிறார். ஏமாற்றுகிறார்" என்பதுதான்.

ஆனால், உண்மையில் தமிழீழ கோரிக்கைக்கு ஒரு உந்துதலை, விசையை டெசோ தந்துவிடும் என்று காங்கிரஸ் பயந்திருக்கிறது, இலங்கை நினைத்திருக்கிறது என்பதற்கான சாட்சியே சிதம்பரத்தின் சந்திப்பு. சீமான் வாயில் ரத்தம் வரும் அளவு கத்தினாலும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் கருணாநிதி என்னும் முதியவரின் அறிவிப்பை ஏன் சீரியசாகப் பார்க்கவேண்டும்? முதல் காரணம். சீமான் அமைப்பைப் போல திமுக சில்லரை அமைப்பு இல்லை. இரண்டாவது, ஒரு நாள் போராட்டமாக இல்லாமல் அதெற்கென முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கினால், சிதறிக்கிடக்கும் தமிழகத் தமிழர்களின் கோபம், கோரிக்கை உருப்பெற அது வழிவகுத்துவிடும் என்பது.

கருணாநிதியின் உள்ளம் தூய உள்ளமா, அவரது இதயம் உண்மையில் ஈழத்துக்காக துடிக்கிறதா என்பது இங்கே கேள்வியில்லை. பருண்மையாக, ஆப்ஜக்டிவாக ஒரு அரசியல் கட்சியின் பலம், அதன் நடவடிக்கை என்னவாக இருக்கிறது என்பதே முக்கியத்துவம் பெறுகிறது. அப்படி பலம் பொருந்திய ஒரு கட்சி, அமைப்பு ரீதியில் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட ஒரு செயல்திட்டத்தை முன் வைக்கும்போது ஈழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் அதைக் கிண்டலடித்து எதிர்ப் பிரசாரம் செய்தால், அந்த நேரத்தில் அவர் எப்படி காங்கிரசையும் பகைத்துக்கொள்ள முடியும்?

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அரசியல் எதார்த்தம் என்பது காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவத்தில் பிற கட்சிகள் அணி சேர்வதாக இருக்கிறது. காங்கிரசை விட்டுவிட்டு பாஜக அணியில் கருணாநிதி சேர்வதை விரும்புகிறார்களா இவர்கள்? பாஜக என்ன ஈழ ஆதரவுக் கட்சியா? காங்கிரசைப் பகைத்துக்கொள்வதற்கு கருணாநிதிக்கு தனிப்பட்ட காரணங்களே இருக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டு பெரிதாக அனுமதித்து திமுக ஆட்சி இழக்க காரணமாக இருந்தது, மகள் கனிமொழியை கைது செய்து சிறைவைத்தது, ராஜாவை சிறை வைத்தது என்பது போல. ஆனாலும் இப்போது அவருக்கு வேறு வழியில்லை. கருணாநிதிகூட கொள்கை மாறுபாடு காரணமாக பாஜக-வுடன் சேர மறுக்கிறவர் அல்ல. கடந்த காலத்தில் சேர்ந்தவர்தானே அவர். ஆனால் இப்போதைய சூழலில் பாஜகவுடன் சேர்வது என்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதாக முடிந்துவிடும். யாருடன் கூட்டணியில் இருந்தாலும் பாஜக என்பது அதிமுகவின் இயற்கைக்கூட்டணி. திமுக- ஆதரவில் ஆட்சியைப் பிடித்தாலும் ஜெயலலிதா மீது பாஜக கரிசனையாகவே நடந்துகொள்ளும். அதே சமயம், காங்கிரஸ்-திமுக அப்படி இயற்கைக்கூட்டணி அல்ல. ஜெயலலிதா உள்ளே நுழைந்து காங்கிரசோடு சேர்ந்துகொண்டால், திமுக தேசிய அநாதையாகிவிடும், பாஜக அதை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால்கூட.

ஈழத்தில் புலிகள்-அரசுக்கு இடையிலான இறுதிப்போரின்போது கூட இப்படித்தான் நடந்தது. ஈழ நிலவரங்களுக்காக சோனியாவை விமர்சிக்காத ராமதாஸ் கருணாநிதியையே திட்டிக்கொண்டிரு்தார். காங்கிரசிடம் இருந்து திமுகவைப் பிரித்து அந்த இடத்தில் அதிமுகவை அமர்த்துவதே இங்கிருந்த பல கட்சிகளின், மீடியாக்களின் மறைமுகத் திட்டமாக இருந்தது. ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது ஈழ நிலைப்பாட்டுக்காக காங்கிரசை ஒரு வார்த்தை கூட விமர்சித்ததில்லை பாமக. கடைசியாக, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும்போதுகூட, சும்மா பெயரளவுக்குக்கூட ஈழத்தைக் காரணமாகக் காட்டவில்லை அந்தக் கட்சி. விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது "சோனியாவோடு நல்லுறவு நீடிக்கிறது" என அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்.

சொந்த இனம் சாகும்போது பதவியில் இருந்ததாக கருணாநிதியை 100 வார்த்தை விமர்சிக்கும் எவரும் ராமதாசை ஒரு வார்த்தை கூட திட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், திருமாவளவனை மட்டும் திட்டுகிறார்கள். காரணம் இப்போது ராமதாஸ் கருணாநிதியோடு இல்லை. திருமாவளவன் இருக்கிறார். அப்படியானால் இவர்களின் குறிக்கோள் ஈழ ஆதரவா இல்லை கருணாநிதி எதிர்ப்பா?

அரசியல் ரீதியில் இடது-மையவாத (Left of Centre) நிலைப்பாடு கொண்ட திமுகவை அழித்து வலதுசாரி அதிமுகவுக்கு போட்டியில்லாத அரசியல் வெளியை உருவாக்குவதுதான் தமிழ்த் தேசிய வாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோரின் தீவிர முழக்கங்களுக்குப் பின்னால் உள்ள திட்டமோ என்ற ஐயம் வருகிறது. கருணாநிதியின் பல்டிக்கு சற்றும் குறைவில்லாத கேலிக்கூத்து எதுவென்றால், தமிழ் ஈழம் அமைவதையே விரும்பாதவர்கள் மு.க.வின் பல்டி குறித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பாரிதான்.

அரசியல், வரலாற்று உணர்வு மந்தித்து பிழைப்பு வாதத்தில் மூழ்கிக்கிடக்கும் இளைய தலைமுறை இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாது என்பது காவிகளுக்கும் அவர்களின் தமிழ்த் தேசியக் கூவிகளுக்கும் சாதகமே

3 comments:

சிவக்குமார் said...

//தமிழ் ஈழம் அமைவதையே விரும்பாதவர்கள் மு.க.வின் பல்டி குறித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பாரிதான்//

ஆமாம் அதுதான் இன்ப அதிர்ச்சி.

நல்ல பதிவு

Unknown said...

உங்கள் இணையத்தை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க ஓட்டளிப்புப் பட்டையை இணைக்க மறவாதீர்கள் .


http://www.tamil10.com/



ஒட்டுப்பட்டை பெற







நன்றி

www.eraaedwin.com said...

மிக அருமையான கட்டுரை இது தோழா. ஆனாலும் கலைஞர் விசுவாசிகள் இதை தங்களுக்கு சாதகமாகக் கொள்ளக் கூடிய ஆபத்தும் உண்டு

Post a Comment