Monday, September 5, 2011

திட்டினால் சிரிக்கும் மலர். எச்சரிக்கை.

சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவர்களது விருப்பம். இதனை ஏற்கமுடியாதென்றால் மறுப்பவர்கள் தங்கள் மறுப்பை சொல்லலாம், எழுதலாம். ஆனால் "5 கோடி தமிழர்களுக்கு ஒரே தந்தையா" என்று 1980-களில் கேள்வி கேட்டு கொச்சைப்படுத்தியது தினமலர். அந்த காலத்தில் அதற்கு மிகக் குறைந்த சர்குலேஷனே இருந்தது. அப்போது எழுந்த எதிர்ப்பு பிரசாரமே அந்த நாளேட்டை பிரபலப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை அருவருப்பாக எழுதி அது விளைவிக்கும் எதிர்ப்பின் வெளிச்சத்திலேயே தினமலர் வளர்ந்து வருகிறது.  தினகரன் பத்திரிகையை 2005ல் சன் குழுமம் வாங்கிய பிறகு அதன் சர்குலேஷன் பெரும் வளர்ச்சி கண்டது. தினமலர் சர்குலேஷன் பெருத்த அடிவாங்கி அது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்து. தினமலர் பாணி இதழியல் மீது இருந்த பொது வெறுப்பாலும், பாமக, அரசு ஊழியர்கள் எடுத்த தீவிர புறக்கணிப்பு நிலையாலும், அதைவிட சர்குலேஷன் குறைந்த தினமணியைவிட சமூக முக்கியத்துவம் குன்றி, கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தினமலர்.

இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் உற்சாகமான தினமலர் மீண்டும் தமது விருப்பங்களை செய்திகளாக, அதுவும் அருவருக்கத் தக்க முறையில் அவதூறாகவும் எழுதி வருவதாக அறிகிறேன். இதனால், அதற்கு இரண்டு நன்மை. தன் கருத்தியலை எழுதியதாகவும் ஆகும், அந்த எழுத்தின் பரபரப்பில் விளம்பரமும் கிடைக்கும். அப்படித்தான் அது வளர்ந்தது.  யாராவது என்னைய அடிங்கடா என்று அலறுகிறது தினமலர். உங்கள் எதிர்ப்பும், வசையும் அல்வா மாதிரி அதற்கு இனிக்கும்.  புறக்கணிப்புதான் சரியான தண்டனை என்பதை உணராத தமிழர்களே திட்டுங்க.... திட்டுங்க திட்டிக்கிட்டே இருங்க.

ஆனால் ஒன்று,
குஜராத்தி மொழியில் வெளியாகும் இரண்டு மதவெறி நாளேடுகளான . சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகியவைதான் குஜராத் பற்றி எறிந்ததற்கும் மக்களே மதம் பிடித்து அலைவதற்கும் காரணம். அப்போதும் தமிழகத்தில் அவற்றுக்கு இணையான திட்டமும் வெறியும் மிகுந்த தினமலர் இருந்தது. ஆனால், அதன் அவதூறுகள் தமிழகத்தில் பொதுக் கருத்தை உருவாக்கவில்லை. காரணம், ஒரே பத்திரிகையால், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பொதுக் கருத்தை உருவாக்கிவிடமுடியாது. தினமலர் ஒன்றை பேசினால், தினத்தந்தி, தினமணி போன்றவை அதனை மறுதலிக்கும் வாய்ப்பு இருந்ததே தினமலரின் சமூகத் தாக்கம் முழுமை அடையாததற்குக் காரணம். இரண்டு பத்திரிகைகள் ஒரு கருத்தியலில் இயங்கினால்தான் ஒன்றின் செய்தி மற்றொன்றை நியாயப்படுத்தி, ருசுப்பித்து பொய்யை பொதுக்கருத்தாக ஆக்க முடியும்.

ஆனால், ஒரு காலத்தி்ல் இருந்ததைப் போல தற்போது தினமலர் தனித்து இல்லை. அதற்கு ஒரு மிதவாத சாதிவெறி, மதவறிக்கூட்டணி "மணி"யாக உருவாகி வருகிறது. உணர்ச்சிவசப்படுவதைவிட உத்தியும் தந்திரமுமே முக்கியம். இப்போது தினமலரை எப்படி எதிர்கொள்வது என்பதில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்துவிட்டால், தமிழகத்தின் முகத்தில் பெரியார் எழுதிய மானமும் அறிவும் காணாமல் போகும். எச்சரிக்கை.