Monday, September 5, 2011

திட்டினால் சிரிக்கும் மலர். எச்சரிக்கை.

சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவர்களது விருப்பம். இதனை ஏற்கமுடியாதென்றால் மறுப்பவர்கள் தங்கள் மறுப்பை சொல்லலாம், எழுதலாம். ஆனால் "5 கோடி தமிழர்களுக்கு ஒரே தந்தையா" என்று 1980-களில் கேள்வி கேட்டு கொச்சைப்படுத்தியது தினமலர். அந்த காலத்தில் அதற்கு மிகக் குறைந்த சர்குலேஷனே இருந்தது. அப்போது எழுந்த எதிர்ப்பு பிரசாரமே அந்த நாளேட்டை பிரபலப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை அருவருப்பாக எழுதி அது விளைவிக்கும் எதிர்ப்பின் வெளிச்சத்திலேயே தினமலர் வளர்ந்து வருகிறது.  தினகரன் பத்திரிகையை 2005ல் சன் குழுமம் வாங்கிய பிறகு அதன் சர்குலேஷன் பெரும் வளர்ச்சி கண்டது. தினமலர் சர்குலேஷன் பெருத்த அடிவாங்கி அது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்து. தினமலர் பாணி இதழியல் மீது இருந்த பொது வெறுப்பாலும், பாமக, அரசு ஊழியர்கள் எடுத்த தீவிர புறக்கணிப்பு நிலையாலும், அதைவிட சர்குலேஷன் குறைந்த தினமணியைவிட சமூக முக்கியத்துவம் குன்றி, கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தினமலர்.

இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் உற்சாகமான தினமலர் மீண்டும் தமது விருப்பங்களை செய்திகளாக, அதுவும் அருவருக்கத் தக்க முறையில் அவதூறாகவும் எழுதி வருவதாக அறிகிறேன். இதனால், அதற்கு இரண்டு நன்மை. தன் கருத்தியலை எழுதியதாகவும் ஆகும், அந்த எழுத்தின் பரபரப்பில் விளம்பரமும் கிடைக்கும். அப்படித்தான் அது வளர்ந்தது.  யாராவது என்னைய அடிங்கடா என்று அலறுகிறது தினமலர். உங்கள் எதிர்ப்பும், வசையும் அல்வா மாதிரி அதற்கு இனிக்கும்.  புறக்கணிப்புதான் சரியான தண்டனை என்பதை உணராத தமிழர்களே திட்டுங்க.... திட்டுங்க திட்டிக்கிட்டே இருங்க.

ஆனால் ஒன்று,
குஜராத்தி மொழியில் வெளியாகும் இரண்டு மதவெறி நாளேடுகளான . சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகியவைதான் குஜராத் பற்றி எறிந்ததற்கும் மக்களே மதம் பிடித்து அலைவதற்கும் காரணம். அப்போதும் தமிழகத்தில் அவற்றுக்கு இணையான திட்டமும் வெறியும் மிகுந்த தினமலர் இருந்தது. ஆனால், அதன் அவதூறுகள் தமிழகத்தில் பொதுக் கருத்தை உருவாக்கவில்லை. காரணம், ஒரே பத்திரிகையால், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பொதுக் கருத்தை உருவாக்கிவிடமுடியாது. தினமலர் ஒன்றை பேசினால், தினத்தந்தி, தினமணி போன்றவை அதனை மறுதலிக்கும் வாய்ப்பு இருந்ததே தினமலரின் சமூகத் தாக்கம் முழுமை அடையாததற்குக் காரணம். இரண்டு பத்திரிகைகள் ஒரு கருத்தியலில் இயங்கினால்தான் ஒன்றின் செய்தி மற்றொன்றை நியாயப்படுத்தி, ருசுப்பித்து பொய்யை பொதுக்கருத்தாக ஆக்க முடியும்.

ஆனால், ஒரு காலத்தி்ல் இருந்ததைப் போல தற்போது தினமலர் தனித்து இல்லை. அதற்கு ஒரு மிதவாத சாதிவெறி, மதவறிக்கூட்டணி "மணி"யாக உருவாகி வருகிறது. உணர்ச்சிவசப்படுவதைவிட உத்தியும் தந்திரமுமே முக்கியம். இப்போது தினமலரை எப்படி எதிர்கொள்வது என்பதில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்துவிட்டால், தமிழகத்தின் முகத்தில் பெரியார் எழுதிய மானமும் அறிவும் காணாமல் போகும். எச்சரிக்கை.

Friday, March 18, 2011

கூட்டணிக் குழப்பங்கள்: ஒன்னும் தெரியாத "பாப்பா..."

கூட்டணிக் கட்சியான மதிமுக-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கை குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை, தேமுதிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் உதிரிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்து அந்தக் கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. திடுதிப்பென மதிமுக-வை அம்போவென விட்டுவிட்டு, அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளின் பட்டியல், அதற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை இரவு அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா.

எவரையும் மதிக்காத ஜெயலலிதா-வின் திமிர்த்தனத்தை வீரம் என்று செம்மாந்து போகும் நடுத்தரவர்க அறிவு ஜீவிகள் மந்தகாசப் புன்னகை பூத்தார்கள். "பார்த்தீர்களா.... இதுதான் ஜெயலலிதா. எப்படி "போல்டாக" அறிவித்தார் பார்த்தீர்களா. கருணாநிதியால் இப்படி போல்டாக அறிவிக்கமுடியுமா" என்றெல்லாம் அவர்கள் தங்கள் கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டே பேசினார்கள்.
       அவர்கள் எதிர்பார்த்தது அப்படியே கூட்டணிக் கட்சிகளெல்லாம் திகைத்துப்போகும் என்பதுதான். நடந்ததோ தலைகீழ், ஜெயலலிதா அடித்த ஜின் மயக்கம் தெளியும் அளவுக்கு அந்த இதரக் கட்சிகள் பரபரப்பாக செயல்படத் தொடங்கின. அதிமுக தங்கள் கோபத்தை மதிக்காவிட்டால்  மூன்றாவது அணி அமையும் என்ற பரபரப்புப் பேச்சுகள் கசிந்தன. ஜெயலலிதாவின் விட்டேற்றியான, தான்தோன்றியான திமிர்ப் போக்கு மாறவே இல்லை என்பது நிரூபனமானது. சில ஊடகங்கள் தடவிய "மீட்பர்" ஒப்பனை கலைந்து ஜெயலலிதாவின் கடைவாய் பற்கள் துருத்திக்கொண்டு தெரிந்தன. கூட்டணிக் கட்சிகள் குறித்து கவலைப்படாத மக்கள்கூட அவரது நடவடிக்கை கண்டு முகம் சுளித்தார்கள்.
            
     வட இந்திய மீடியாக்களால் தமிழக நிலவரம் குறித்து கருத்து கேட்பதற்காக நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ள "அரசியல் விமர்சகர்" சோ-மாரியானவர்தான் ஜெயலலிதா-வுக்கு இந்தமுறை தேர்தல் ஆலோசகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதாவின் "போல்டான" நடவடிக்கைகளை ரசிக்கும் அறிவு ஜீவிகள் இந்த சோ-மாரியானவரின் அரசியல் ஞானம் குறித்தும் அவ்வப்போது "அடடா.... அடடா" என்று கூறி வியப்பார்கள்.
         ஒரே நேரத்தில் அனைத்து கூட்டணிகளையும் கடுப்படித்தால் என்ன நடக்கும் என்பதைக்கூட கற்பனை செய்யமுடியாத அளவுக்கு சோ-மாரியானவரின் அரசியல் ஞானம் ஆழமானது என்பதும் புலப்பட்டது.
     உடனே புறப்பட்டது ஜெயலலிதா-வின் பிரச்சாரப்படை. தினமணியில் அஜாதசத்ரு என்ற பெயரில் எழுதும் ஜனசத்ரு (மக்கள் எதிரி) எழுதிய கட்டுரையின் சாரம் இதுதான் : "பாப்பா....க்கு ஒன்னுமே தெரியாது. அவர் என்னமோ 60-70 இடத்துக்குதான் லிஸ்ட் போட்டு வைத்திருந்தார். லிஸ்டை வெளியே விடுங்கள் என்று சொன்னதும், சசிகலாவின் சித்தப்பா மாப்பிள்ளை ராவணன்-தான் அவரது சொந்தக்காரர்கள் கொடுத்த லிஸ்டை எல்லாம் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டார். எல்லாத்துக்கும் அந்த சசிகலா கும்பல்தான் காரணம். பாப்பா... ரொம்ப நல்லவர்" அவ்வளவே.

    சரிப்பா உங்கள் பாப்பா.... ரொம்ப நல்லவர். ஒன்னும் தெரியாதவர் என்றே வைத்துக்கொள்வோம். தமது பெயரில் வெளியாகும் தம் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் எந்தெந்த தொகுதிகள் உள்ளன, வேட்பாளர்கள் யார் என்பது கூடத் தெரியாத மயக்கத்தில் இருக்கும் ஒருவர் எப்படி இந்த மாநிலத்தின் முதல்வராக செயல்படமுடியும்?

    ஒன்னும் தெரியாத பாப்பா தாப்பா போட்டுக்கொண்டால், உடனடியாக கத்தி கூச்சல் போட்டு உதவி கோருவதுதானே வழக்கம்? அப்படி இல்லாமல் கூட்டணிக் கட்சிகளிடம் இவ்வளவு கோபமும் ஆவேசமும் எழுந்த பிறகாவது... அடடா இது நான் தயாரித்த லிஸ்ட் இல்லை என்று கூறி சமாளித்திருக்கலாமே. அப்படி செய்திருந்தாலாவது பாப்பா...க்கு ஒன்றும் தெரியாது என்று நாம் சமாதானம் அடைந்திருக்கலாம். இரண்டு நாள்கள் அரசியல் சூடு கிளப்பிக்கொண்டிருந்தபோதும் அவர் பேசாததற்கு என்ன காரணம், ஜின் மயக்கமா? அல்லது சோ-மாரிகள் ஊற்றிக்கொடுத்த வெற்றி மயக்கமா? இரண்டாவது மயக்கம் மார்ச் இரண்டாவது வாரத்தில் தெளிந்துவிடும். முதல் மயக்கம்.... கொஞ்சம் சிரமம்தான்.

மீண்டும் "சுமுக"ப் பேச்சுவார்த்தை

இதற்கெல்லாம் மத்தியிலும் மீண்டும் அதிமுக அணியில் கூட்டணிப் பேச்சுகள் சுமுகமாக நடப்பதாக பேட்டி கொடுக்கிறார்களாம் தோழர்கள்.

 தமிழகத்தில் இரு அணிகளிலும் நடந்துவரும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் எதனையும் கொள்கையோ புண்ணாக்கோ தீர்மானிக்கவில்லை என்பது வெளிப்படைதான். லாபம் கருதிப் புணரும் அரசியல் வேசைத்தனத்துக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்காகத் தெரியவில்லை.

எவ்விதமான லாபம் என்பதில் வேண்டுமானால் கட்சிகளிடையே வேறுபாடு இருக்கலாம். சிலருக்கு அதிகாரம், சிலருக்குப் பணம், வேறு சிலருக்கோ வெளி மாநிலங்களில் கட்சியின் நலன், சிலருக்கு சமூகத்தில் அவர்கள் சார்ந்த குழுக்களின் தந்திரோபாய நிலையை தக்கவைத்துக்கொள்வது என்று லாபங்களில் பலவிதம். ஒரு வேளை கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்தக் கருத்தை மறுதலிக்க வேகம் காட்டக்கூடும்.

ஆர்.எஸ்.எஸ். பாஜக வெறியர்களான சோ, தினமணி வைத்தியநாதன் போன்ற நபர்கள் அதிமுக-வின் அரசியல் தத்துவ ஆசான்களாக செயல்படுவது தெரிந்த பிறகும், ஜெயலலிதா-வை முதல்வராக்க தங்கள் முகத்தில் தெரித்த அவமானங்களைத் துடைத்துக்கொண்டு தோழர்களால் டி.வி. கேமராக்களில் சிரிக்கமுடியுமானால்,  அது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்று நம்புவதற்கு நாம் ஏமாளிகளல்ல. 

Tuesday, March 1, 2011

ஏப்ரல்-13ல் தேர்தல்: முடிவு தெரிய ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்


அப்பாடா. தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கும் புதுவை ஒன்றியப் பகுதிக்கும் ஏப்ரல் 13-ம் தேதி ஒரு கட்டத் தேர்தல். அசாமில் ஏப்ரல் 4, 11-ம் தேதிகளில் இரு கட்டத் தேர்தல். மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி, மே-10-ம் தேதி வரை ஆறு கட்டத் தேர்தல்.


            தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வெகு முன்பாகவே ஏப்ரல் இரண்டாம் வாரத்திலேயே நடக்கவுள்ளது. அது பரவாயில்லை. ஆனால், ஏப்ரல்-4, 11 தேதிகளில் வாக்களிக்கும் அசாம் வாக்காளர்களும், ஏப்ரல் 13-ம் தேதி வாக்களிக்கும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி வாக்காளர்களும் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும். ஆம். எல்லோருக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை மே-13-ம் தேதிதான். ஏன் இந்தக் கொலை வெறி? தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் மே-16 வரை இருக்கும்போது, ஒரு மாதம் முன்பே தேர்தல் நடத்துவது தேவையா. அப்படியே நடத்தினாலும், மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவதற்காக தமிழக வாக்காளர்கள் ஏன் காத்திருக்கவேண்டும்?


            ஏற்கெனவே, மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த சந்தேகத்தில் அடிப்படை இருக்கிறதோ இல்லையோ, வாக்களித்துவிட்டு ஒரு மாதம் காத்திருக்கும் வாக்காளருக்கு தாம் அளித்த வாக்குதான் உண்மையில் எண்ணப்படுகிறதா என்ற சந்தேகம் எழாதா? வாக்கு இயந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களில் முறைகேடு ஏதும் நடந்திருக்கும் என யாரும் சந்தேகிக்க இது இடமளித்துவிடாதா

       ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மற்ற மாநில மக்களின் மனநிலையில் மாற்றத்தை கொடுத்துவிடக்கூடாது என்ற நோக்கமே இந்த முடிவுக்குப் பின்னணியில் இருக்குமானால், அது சரியா? அது சரியெனக் கொண்டாலும், தமிழகம் முதலிய மாநிலங்களில் ஏன் மேற்கு வங்காளத்தின் கடைசி கட்ட வாக்குப் பதிவுடன் சேர்த்து தேர்தல் நடத்தக்கூடாது?

            என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக சொன்னார் தேர்தல் முடிவு வெளியாகும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதே வாக்காளருக்கு மறந்துவிட்டிருக்கும் என்று!


Friday, February 25, 2011

ஒட்டும் தேமுதிக, முறியும் காங்கிரஸ், சிரிக்கும் திமுக

அதிமுக -வுடன் தேமுதிக உறவு வலுவடைவதும், பலவீனப்பட்டுள்ள காங்கிரஸ்-திமுக கூட்டணி முறியும் சாத்தியம் அதிகமாவதும் திமுக-வுக்கு பலவீனம் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், இந்த இரண்டு காரணிகளும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு சாதகமான வானிலையையே தோற்றுவிக்கின்றன. இது விநோதம்தான் ஆனாலும் உண்மை.

  காங்கிரஸ் கையாலேயே பச்சைக் கொடி காட்டவைத்து எதிர்பார்ப்புக்கு மாறாக பழைய தகுதியுடன் 31 இடம் கொடுத்து பாமக-வை கூட்டணிக்குள்  இழுத்துக்கொண்டது திமுக-வின் உத்தி. காங்கிரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வியூகத்தின் முதல் படி அது. இதனால் திமுக-வுக்கு இரண்டு சாதகங்கள். ஒன்று, இருப்பது இவ்வளவுதான் இதில் எவ்வளவு கொடுக்கமுடியும் என்று காங்கிரசிடம் கேட்கமுடியும், இன்னொன்று, நீங்கள் வெளியே போனாலும் எங்களால் சமாளித்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை நிலையை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே ஈட்டிக்கொள்ளமுடியும்.
      இதற்குப் பிறகு காங்கிரசுக்கு உள்ள சாத்தியங்கள் மூன்று: திமுக தரும் இடங்களைப் பெற்றுக்கொள்வது அல்லது தேமுதிக-வுடன் கூட்டு சேர்ந்து தனி அணியாகப் போட்டியிடுவது அல்லது அதிமுக-கூட்டணியில் இணைவது. தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், அந்தக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், கடைசி இரண்டு சாத்தியங்களும் அடிபட்டுவிட்டன. அதாவது தேமுதிக-வுடன் தனி அணி காண்பதும் இயலாது, அதிமுக கூட்டணியில் நுழைவதற்கும் போதிய இடம் இருக்கப்போவதில்லை. அதிகாரபூர்வமாக அதிமுக-தேமுதிக கூட்டணி முடிவாகும் நிலையில், காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொள்வதா வேண்டாமா அல்லது எத்தனை இடங்கள் தருவது என்பதைத் தீர்மானிக்கும் சர்வ வல்லமையும் திமுக-வுக்கு வந்துவிடும்.
     காங்கிரசை திமுக கழற்றிவிடும்பட்சத்தில் அதற்கு தனியாக நிற்பதைத் தவிர போக்கிடம் இல்லை. தனித்துவிடப்பட்ட பாஜக-வுக்கு ஒரு பேச்சுத்துணை அவ்வளவே. அதே நேரத்தில் வெட்டியாக வாக்கு வங்கி இல்லாத காங்கிரசுக்குத் தரவேண்டிய குறைந்தது 60 இடங்கள் திமுக-வுக்கு மிஞ்சும், இதனால் அதிகமான இடங்களில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மைக்கான வாய்ப்புகளை திமுக அதிகரித்துக்கொள்ளும். இரண்டாவது, தேமுதிக என்னும் அனுபவமற்ற தலைவர்களை பக்குவமற்ற தொண்டர்களைக் கொண்ட பலவீனமான கட்சி சுமார் 40 இடங்களைப் பெற்றாலும்கூட அவை திமுக-வுக்கு சுலப வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடும். ஒருவேளை காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நுழையும் பட்சத்தில் யானை புகுந்த வெண்கலக் கடையாக அதிமுக முகாமில் கடும் சத்தமும் சலசலப்பும் தோன்றும். மொத்த இட ஒதுக்கீடுகளையும் மறுவரையறை செய்யவேண்டியது வரும். பழைய கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் வெளியேறலாம், ஒருவேளை காங்கிரஸ் இல்லாத திமுக-வுடன் கூட்டணிக்கே வந்தாலும் வரலாம். மதிமுக-வுக்கு தார்மீக (!?) நெருக்கடி தோன்றலாம்.
          தம்மளவிலேயே பலமாக உள்ள வடக்கு மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், பாமக- துணையோடு தேர்தலை எதிர்கொள்ளும் திமுக, அந்த மண்டலத்தில் (சென்னை நீங்கலாக) கிட்டத்தட்ட எல்லாத் தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துகொள்ளும். தென் மாவட்டங்களில் வழக்கமான தேவர் அரசியலுக்கு எதிரான தலித், நாடார் வாக்குகள் உறுதி செய்யப்பட்டால், அங்கும் திமுக-வுக்குப் பெரும் சவால்கள் இருக்காது. அந்த நிலையிலும் திமுக-வின் கவலை ரேகை சென்னை,  டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம், கடலோர மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் விரவியிருக்கும். ஆனால், இந்தப் பகுதிகளில் 30-40 சதவீத இடங்களில் வென்றாலும் ஆட்சியமைப்பதற்குப் போதுமான இடங்கள் கிடைத்துவிடும்.
எப்படிப்பார்த்தாலும், காங்கிரஸ் போடும் கணக்கு தப்புக்கணக்காகப் போவதற்கே சாத்தியங்கள் அதிகம். காத்திருப்போம் காட்சிகள் விரியும், கணிப்புகளைவிட யதார்த்தம் சுவாரசியமானது.



Wednesday, January 12, 2011

அதிமுக: வாசலில் கம்யூனிஸ்டுகள் புழக்கடையில் பாஜக


"ஆடு பகை குட்டி உறவு" என்பார்கள் ஊரில். அரசியலில் இதை "பாஜக பகை, அதிமுக உறவு" என்று மாற்றிச்சொல்லுகிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
பாஜக-காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணியை இந்திய அளவில் கட்டியெழுப்புவோம் என்று அறிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அதற்காக இரு அணிகளிலும் இல்லாத கட்சிகளை ஒன்று சேர்க்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் எதிர்ப்பில் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக-வின் மதவாத ஆபத்தில் இருந்து நாட்டைக் காப்பதற்காக, ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தனர். ஊழலோடு ஒப்பிடுகையில் மதவாதமே அதிக ஆபத்தானது என்று வாதிட்டனர்.


ஆனால், அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மன்மோகன் அரசு முன்வந்தபோது, நாட்டின் இறையாண்மையே ஆபத்துக்குள்ளாகிறது என்று கூறி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். அன்றுமுதல் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் எதிராக முன்பைவிடத் தீவிரமாக அரசியலில் இயங்கி வருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். ஐமுகூ அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றபோது, "மீண்டும் எப்போதுமே காங்கிரசுக்கு ஆதரவு தரமாட்டீர்களா" என்று செய்தியாளர்கள் கேட்டபோது "அப்படிச் சொல்லமுடியாது என்றார்" சி.பி.எம். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்.

மதவாத ஆபத்தில் இருந்து நாட்டைக் காக்கவேண்டிய தேவை வந்தால் மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவளிக்க நேரலாம் என்பதே அவர் சொல்லிய பதிலின் பொருள். பாஜக, காங்கிரஸ் இரண்டையும் எதிர்த்தாலும், அவர்களுடைய காங்கிரஸ் எதிர்ப்புக்கும், பாஜக எதிர்ப்புக்கும் இடையில் உள்ள நுட்பமான வேறுபாடு இங்குதான் இருக்கிறது. பாஜக-வை எதிர்ப்பதற்குதான் பரம்பரை எதிரியான காங்கிரசுக்கே ஆதரவளிக்கவேண்டிய தேவை கம்யூனிஸ்டுகளுக்கு வந்தது.
    கம்யூனிஸ்டுகள் ஆள்கிற அல்லது ஆளும் வாய்ப்புள்ள மாநிலங்களில் அவர்களுக்கு எதிரி காங்கிரஸ்தான். அவர்களோடு கைகோர்த்தாலும் கைகோர்ப்போம் ஆனால், பாஜக-வை வரவிடமாட்டோம் என்று கூறும் அளவுக்கு இந்துத்துவ அரசியலின் ஆபத்தை கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் பார்க்கிறார்கள்.

   இந்தியா என்ற அமைப்பை, அதன் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியலை மதவாத அரசியல் சிதைத்துவிடும், உண்மையான பகைவர்களை மறைத்து மக்களையே ஒருவருக்கு ஒருவர் பகைவர்களாக நிறுத்திவிடும், சமூகத்தை மிகப் பிற்போக்கான நிலைக்குத் தள்ளிவிடும், ராமர் கோயில், ராமர் பாலம் என்ற எளிய கதைகளைச் சொல்லி நாட்டை ரத்தக் களரியாக்கிவிடும் என்பதுதானே அவர்களது அச்சம். அதனால்தானே காங்கிரசுடனான உடனடி அதிகாரப் போட்டியைவிட பாஜக-வுடனான தங்கள் கருத்தியல் யுத்தமே முக்கியமானது என்று கருதி அரசியலை நகர்த்துகிறார்கள்.

ஆனால் பாஜக-வின் கொள்கைகளையே பின்பற்றும் வேறொரு கடசியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று ஏதாவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரிடம் கேட்டுப் பாருங்கள்... அவர் உடனடியாக மறுப்பார். ஆனால், தமிழ்நாட்டில் அதுதானே நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளின் பாரம்பரிய கூட்டணியான திமுக காங்கிரசுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில், திமுக-அதிமுக அல்லாத ஒரு கூட்டணியையோ, அல்லது அரசியல் மாற்றையோ உருவாக்கியிருக்கவேண்டிய கம்யூனிஸ்டுகள் அதிமுக-வுடன் கூட்டணி என்று கூச்சமில்லாமல் அறிவித்து "தோழர்" ஜெயலலிதாவுடன் கைகோர்த்துவிட்டனரே.

தேசிய அளவில் காங்கிரசுடன் பகைத்துக்கொண்டு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு சமம்தானே இது.

ஜெ. எந்தவகையில் பாஜக இல்லை?
   ராமர் கோயில், ராமர் பாலம் போன்ற பொய் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால அரசியலில் வன்முறையைத் திணிக்கும் பாஜக அரசியலில் கிஞ்சித்தும் மாறுபாடு இல்லாதவர் ஜெயலலிதா என்பது மெத்த படித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குத் தெரியாதா?

ஜெயலலிதா-வும் ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்தவர், ராமர் பாலத்தை காரணம் காட்டி சேதுக்கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர், மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தவர், ஹிட்லரின் இந்திய வடிவமான மோடிக்கு வாழ்த்து சொல்ல குஜராத் வரை சென்றவர், பாஜக-வாவது நாங்கள் முஸ்லீம்களுக்கு எதிரியல்ல என்று பெயரளவுக்கு சொல்வதற்காகவாவது, தங்கள் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சரை வைத்திருந்தார்கள். ஒரு முஸ்லீமை குடியரசுத் தலைவர் ஆக்கினார்கள். "தலித்" பங்காரு லட்சுமணனை கட்சித் தலைவர் ஆக்கினார்கள்.

   இது போன்ற பெயரளவிலான பம்மாத்துகளைக்கூட செய்யமுடியாத அளவுக்கு தீவிர இந்துத்துவவாதியான ஜெயலலிதா தனது அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லீமைக் கூட அமைச்சராக்கவில்லை. "தலித்" சமூகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அருணாசலத்தை தமது விமானத்தில் இருந்து கீழே இறக்கினார். தென் மாவட்டத்தில் தலித்துகளுக்கு எதிரான தேவர் அரசியலுக்கு தூபம் போட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக 2 லட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு, நள்ளிரவில் கைது செய்யும் அளவுக்கு,  போராடிய போக்குவரத்துத் தொழிலாளர்களை இரக்கமற்று நசுக்கும் அளவுக்கு,  அரசு வேலைக்கு ஆளெடுப்பதையே தடை செய்யும் அளவுக்கு, வேலைக்கு எடுக்க நேர்ந்தபோது அவர்களுக்கு 3 ஆயிரமும் 4 ஆயிரமும் அத்துக்கூலி கொடுக்கும் அளவுக்கு, பத்தாயிரக் கணக்கில் சாலைத் தொழிலாளர்களை, மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கும் அளவுக்கு, அவர் தொழிலாளர் வர்க்க விரோதியாக ஆட்சியில் இருக்கும்போது செயல்பட்டார். 10-ம் வகுப்பு தேறிய பெண்களுக்குத் திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்களை நிறுத்தி, "அரசை சுருக்கு (டவுன் சைஸ் த கவர்ன்மென்ட்)" என்ற அமெரிக்க பொருளாதாரக் கொள்கையை ஏற்று கைக்கூலி அரசை நடத்தினார். இந்த ஆட்சியைத்தான் மீண்டும் கட்டமைக்க துணை போகிறதா கம்யூனிஸ்ட் கட்சி?

அதிமுக - தமிழகத்தின் பாஜக

அவரது மதவெறி பாஜகவுக்கு சற்றும் குறைந்ததல்ல. அவரது சாதியம் பாஜக-வுக்கு சற்றும் குறைந்ததல்ல. அவரது தொழிலாளர் விரோதப் போக்குக்கு இணையாக சொல்லும் அளவுக்கு பாஜக, காங்கிரஸ் மட்டுமல்ல எந்தக் கட்சியுமே இந்தியாவில் இல்லை. மக்களுக்கு "கசப்பு மருந்து" கொடுப்பதில் அவர் பாஜகவுக்கு, காங்கிரசுக்கு எல்லாம் பெரிய அக்கா.
அவர் எந்த வகையில் தனது இயல்பில், அரசியலில் ஒரு பாஜக-வாக ஆர்.எஸ்.எஸ். ஆக இல்லை என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்லமுடியுமா?

அகில இந்திய அளவில் பாஜக அல்லாத-காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி என்று துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துள்ள கம்யூனிஸ்டுகள், தமிழ்நாட்டில் எந்த அளவிலும் பாஜக-வுக்கு குறைச்சலில்லாத மதவாதியான, வலது பிற்போக்குவாதியான ஜெயலலிதாவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள். பாஜக-வை எதிர்ப்பதற்காக ஜென்ம விரோதியான காங்கிரசுடன் கூட்டணி வைத்தவர்கள் எப்படி, திமுக-வை எதிர்ப்பதற்காக தமிழகத்தின் "பாஜக"வான அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

பாஜக-அதிமுக உத்திக்கு கம்யூனிஸ்டுகள் பலியாவதா?

வாக்கு வங்கியே இல்லாத பாஜக அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதால் அதிமுக-வுக்கும் லாபமில்லை, பாஜக-வுக்கும் லாபமில்லை. அதைவிட தங்கள் ஜென்ம விரோதிகளான கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் அதிமுக-வை வெற்றிபெற வைத்துவிட்டால் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா-வின் பலம் தங்களுக்குதான் சாதகம் என்பதுதானே பாஜக-வின் கணக்கு.
இந்த புரிதலோடுதானே ஒத்த கருத்துடைய பாஜகவும் அதிமுக-வும் பிரிந்து கிடக்கின்றன. நாடாளுமன்றத்தில் அதிமுக-வின் 9 எம்.பி.க்கள் ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்பட்டால் அதிமுக பாஜகவுக்கு வாக்களிக்குமா மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்தும் கம்யூனிஸ்டுகளின் முயற்சிக்கு ஆதரவளிக்குமா?
இந்தக் கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தெரியாது என்று கம்யூனிஸ்டுகள் சொன்னால் அது நடிப்பாகவே இருக்கும்.
ஜெயலலிதா-வின் அரசியல் நம்பகத்தன்மை நாடறிந்தது. ஈழத் தமிழர் என்று யாருமில்லை இலங்கைத் தமிழர்தான், பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்கவேண்டும் என்று பேசிவந்த ஜெயலலிதா, தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு திடீரென தனி ஈழம் அமைப்போம் என்றார். அதே பாணியில் ஆ.ராசா-வை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் காங்கிரசுக்கு ஆதரவு என்றார். மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினோமே என்று கம்யூனிஸ்டுகள் பதைபதைத்தனர். தன் சூழ்ச்சி பலிக்காமல் போன அடுத்த நொடி... "சும்மாச்சுக்கு" சொன்னேன் என்றார். அப்போதைக்கு கம்யூனிஸ்டுகளின் நெருக்கடி தீர்ந்தாலும் இத்தகைய நம்பகத்தன்மையுடைய "தோழி" ஒருவர் தேர்தலுக்குப் பிறகு எப்படி நடந்துகொள்வார் என்பது கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியாதா?
ஜெ. மீது வழக்கு, விமர்சனம் என்று பட்டையை கிளப்பினாலும் சோ, சுப்ரமணிய சாமி போன்ற இந்துத்துவ, பாஜக அனுதாபிகளுடன் ஜெ.வின் அந்தரங்க உறவு தொடர்வதும் கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியாதா?

தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட் சார்பு தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு ஆசிரியரிடத்தில் என் நண்பர் கேட்டார் "நீங்கள் கம்யூனிஸ்ட்தானே?" என்று. அந்த ஆசிரியர் உடனடியாக பதில் சொன்னார், "ஆம் நான் கம்யூனிஸ்ட்தான் ஆனால், அதிமுக-வுக்கு வாக்களிக்கமாட்டேன்" என்று. தங்கள் தொழிற்சங்க அணிகளின் அரசியல் விருப்பார்வங்களுக்குக்கூட எதிராக அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாதிக்கப்போவது என்ன? இந்து ராஜ்ஜியமா?

கம்யூனிஸ்டுகளே.....

தன் புழக்கடை வழியே பாஜக-வுடன் உறவும் கொள்கை உடன்பாடும் கொண்டுள்ள ஜெயாவின் வாசல் வழியே நீங்கள் உறவு கொண்டுள்ளீர்கள்ஜெ. அணியில் நிற்பதன் மூலம் பாஜக எதிர்ப்பு என்னும் உங்கள் நிலைப்பாடு பொய்த்துப் போகவில்லையா? நீங்கள் அதிமுக-வங்கியில் அரசியல் ஆதரவை டெபாசிட் செய்கிறீர்கள். பாஜக-அதனை வித்ட்ரா செய்யக்காத்திருக்கிறது. இந்தக் குரல் உங்கள் காதுகளை எட்டாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது.